Politics

ஒரே கட்சியில் இணைய வேண்டியதில்லை.. ஒரே அணியில் இணைந்தால் வெற்றிதான் – டிடிவி யின் புதுக்கணக்கு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (டிசம்பர் 15) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூட்டணி குறித்து பேசுகையில்,பிப்ரவரி 24ஆம் தேதி வரை எங்களுக்கு நேரம் உள்ளது என்றார்.

விஜய் உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை தான் இன்று தமிழக அரசியலில் நிலவுகிறது. இதை அதீத நம்பிக்கையில் நான் கூறவில்லை. இன்றைய அரசியல் சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால் அமமுகவின் நிலைப்பாடு உறுதியாக இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அது அவரது கருத்து. நான் எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன் என்றார் .

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறியது ஏற்புடையது அல்ல. அரசியலை கடவுள் பெயரால், மதம் ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன், தம்பி, தங்கைகள் என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, அது குறித்த அறிவிப்பு வரட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

மேலும் அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று தான் கூறினேன். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று கூறவில்லை. ஒரே அணியில் இணைந்தால் தான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான பதிலை முடிவை மக்கள் எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version