Sports

சூதாட்ட குற்றச்சாட்டை எதிர்த்த வழக்கு : தோனி ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவு!

கிரிக்கெட் ஜாம்பவான் தோனி, நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கட்டணமாக செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக  அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி  சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிவிக்கை வெளியிட்டார். இதில் தோனி பெயரும் இடம் பெற்றிருந்தது. 

இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சூதாட்டம் தொடர்பாக தனது பெயரை குறிப்பிட்டு விவாதம் நடத்திய ஜீ மீடியா கார்ப்பரேஷன், ஜீ நியூஸின் ஆசிரியர் மற்றும் வணிகத் தலைவர் சுதிர் சவுத்ரி, ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமார் மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மீது தொடர்ந்த வழக்கில் தனக்கு 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  தோனியின் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டார். 

இதற்கு வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான ஜி. சம்பத் குமார் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், இந்த நடைமுறையினால் சம்பத் குமார் எவ்வாறு பாதிக்கப்படுவார் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தோனி ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் என்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதேசமயம் இந்த வழக்கில் தொடர்புடைய சிடியை எழுத்து வடிவமாக்கி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 12) நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது “சிடியில்  உள்ள உள்ளடக்கங்களை மொழிபெயர்ப்பதும், அதனைப் பிரதி எடுப்பதும் பெரிய வேலை என்பதால் இதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் தட்டச்சரின் முழு நேரத்தையும் சுமார் 3 முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்” என்று  குறிப்பிட்ட நீதிபதி,  இந்த வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த வாதி  என்ற முறையில், அந்தச் செலவுத் தொகையைச் செலுத்த வேண்டியது தோனியின் கடமை. எனவே   மொழியாக்கத்துக்கான கட்டணமாக ரூ. 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12ஆம் தேதிக்குள் தோனி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version