Latest

விஜய் புஸ்ஸி ஆனந்த் ஆதவ், தவெக தலைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் லிஸ்ட் இதோ…..!

சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் விஜய் உள்பட டாப் தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகினறனர். அந்த வகையில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்பட டாப் தலைவர்கள் போட்டியிட ஆர்வமாக உள்ள தொகுதிகளின் முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் விஜயின் தவெக கட்சி முதல் முறையாக களம் காண்கிறது. விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் இன்னும் எந்த கட்சியும் சேரவில்லை. இருப்பினும் தற்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் தொடர்ந்து வருகிறது. இது தவெகவினருக்கு நம்பிக்கையை வழங்கி உள்ளது.

கடைசி நேரத்தில் காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று தவெகவினர் நம்புகின்றனர்.இருப்பினும் இது சாத்தியமா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்க தவெக தலைவர்கள் தங்களுக்கான தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னையை சுற்றி..

அந்த வகையில் தவெக தலைவர்களில் பலரும் சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் தவெக தலைவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட விரும்பினர்.

ஆனால் கட்சி நடத்த ஆய்வுகளில் சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தான் தவெகவிற்கு செல்வாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவெக சர்வே ரிசல்ட்

அதன்படி தவெகவின் சர்வேயின்படி சென்னையின் குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளில் தவெக 25% முதல் 30% வரை வாக்குகளைப் பெறும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரசாரம் தீவிராகும்போது வாக்கு சதவீதம் இன்னும் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் பல தவெக தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றிய தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தொகுதி

அதன்படி விஜய் சென்னை வேளச்சேரி, விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, நாகப்பட்டினம், திருச்சி கிழக்கு என 5 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட தேர்வு செய்தார். தற்போது இந்த 5 தொகுதிகளில் வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி 2வது தொகுதியாக விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றியை, தோல்வியை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தான் தீர்மானிக்கின்றனர். இங்கு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ளனர். சிறுபான்மையினரின் ஓட்டுகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆதவ் – நிர்மல் குமார்

இதற்கு அடுத்தப்படியாக தவெக தேர்தல் பிரசார பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டினார். தற்போது அவர் திருவள்ளூர் தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம்.

அதேபோல் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் இதற்கு முன்பு தனது சொந்த மாவட்டமான மதுரையின் உசிலம்பட்டி தொகுதியில் களமிறங்க தயாரானார். ஆனால் தற்போது அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாத தகவல்கள் வெளியாகிஉள்ளது.

ஜேசிடி பிரபாகர்

அதேபோல் முன்னாள் அதிமுக தலைவர்களாக ஜே.சி.டி. பிரபாகர் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் களமிறங்க தயாராகி வருகிறார்.

அதிமுகவில் இருந்து வெளியேறிய வி.எஸ். பாபு எழும்பூர் அல்லது திரு.வி.க. நகர் தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படி சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தவெக தலைவர்கள் போட்டியிட ஆர்வம் காட்டும் அதேவேளையில் வேறு சில தலைவர்கள் பிற மாவட்டங்களை குறிவைத்துள்ளனர்.

புஸ்ஸி ஆனந்த்

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூரிலும் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். கடலூர் என்பது புதுச்சேரியையொட்டி வருவதால் புஸ்ஸி ஆனந்த் அங்கு களமிறங்க தயாராகி வருகிறார்.

செங்கோட்டையன் – அருண்ராஜ்

தவெகவின் மூத்த தலைவராக இருக்கும் செங்கோட்டையன் தனது சொந்த தொகுதியான கோபிசெட்டி பாளையத்தில் மீண்டும் போட்டியிட தயாராகி வருகிறார்.

தவெகவின் பிரச்சார பிரிவு செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்.

கல்வியாளர் ஜேப்பியரின் உறவினரான மேரி வில்சன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

பல் மருத்துவர் டி.கே. பிரபு சிவகங்கையில் போட்டியிட தயாராகி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version