General
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி

கோவை: தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
அண்மையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க தலைமைக் கழகச் செயலகத்தில் வந்து கட்சியில் இணைந்தனர். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், குதிரை பேரம் மற்றும் கட்சித் தாவல் அரசியலை தமிழ்நாட்டில் த.வெ.க-வும் செய்கிறது என்றும் இதற்காகத் தனது தலைமைச் செயலகத்தையே அதிகாரப்பூர்வ மையமாக மாற்றியுள்ளனர்” என்று மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்கள். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள், அமைச்சர்களை தலைமை செயலகத்தில் சந்தித்தால், அப்போதே கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டது.
அதே பாணியில் தான், முதல்வர் விஜய்யை காங்கிரஸ மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சித்து தான் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.