Politics

எங்கள் கட்சி பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம் – செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் தோழமைக் கட்சிகள் உட்கட்சி விவகாரத்தில் தயவு கூர்ந்து எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியது இது தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக கடன் வாங்கும் மாநிலமாக உள்ளது என சமூக வலைதளத்தில் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டதற்கு வெளிப்படையாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எங்கள் கட்சியில் என்ன பிரச்சனையோ அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவித்து விட்டோம். நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், எங்களுடைய தோழமைக் கட்சிகளும் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். உட்கட்சி விவகாரத்தில் தயவு கூர்ந்து எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று நான் வேண்டுகோளை வைக்கிறேன். ஏற்கனவே நடவடிக்கைக்கு நாங்கள் பரிந்துரை செய்து விட்டோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையிலோ, தமிழ் மண்ணிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையிலோ, தமிழ்நாடு அரசின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லுவதையோ உண்மையான தோழமை கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் யாராக இருந்தாலும் அனுமதிக்காது.

தோழமைக் கட்சிகளுக்கு தோழமையோடு சொல்கிறேன் இதை இத்தோடு விட்டுவிட வேண்டும். பெரிது படுத்த வேண்டாம்” என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version