Politics
கோவையில் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி – அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. இந்த முறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை திமுகவை வெற்றி பெற செந்தில் பாலாஜி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார். அந்த வகையில் அவர் செய்துள்ள ஒரு செயல் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும் ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் முட்டி மோதி வருகின்றன. இதனால் அரசியல் களம் இப்போதே அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தேர்தல்களாக பெறும் வெற்றியை மீண்டும் தொடர திமுக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது.
கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களாகவே கொங்கு மண்டலத்தில் திமுக பெரியளவுக்கு வெற்றி பெற்றதில்லை. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்தனர். அவர் அங்கு களப்பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளார். திருப்பூர் பல்லடத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி, திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பு பணியில் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார். மறுபக்கம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற திட்டங்கள் வகுத்து வருகிறார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் நேற்று திறக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கோவையில் திமுக வெற்ற ஒரே தொகுதி சிங்காநல்லூர் தான். அதனால் அந்த தொகுதியை இந்தமுறை திமுக அதிக கவனம் செலுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் 10 தொகுதிகளில் முதல் தேர்தல் அலுவலகத்தை சிங்காநல்லூரில் திறந்துள்ளனர்.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. சட்டமன்ற தேர்தல்களில் அங்கு அதிமுக எப்போதுமே பெரும் வெற்றியை பெறும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் கூட, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. தேர்தல் பணிகளிலும் எப்போதும் அதிமுக முந்தும்.
அதற்கு முக்கிய காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. களப்பணிகளில் வேகம் காட்டி, கோவை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். ஆனால் அதிமுக பெரியளவுக்கு களப்பணிகளை தொடங்காத நிலையில் செந்தில் பாலாஜி ஆட்டத்தை தொடங்கியிருப்பது வேலுமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அந்த மாநாட்டில் 1.50 லட்சம் மகளிர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல கோவை சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்க துணை முதலமைச்சர் உதயநிதி கோவை வருகிறார். கோவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகா பெற்ற ஓட்டுகளை கண்காணிக்க வேண்டும். மாற்று சிந்தனையில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும். பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நிச்சம் வெற்றி பெறுவோம். இதற்காக கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும். குறிப்பாக 10 தொகுதிகளில் முதல் வெற்றியாக சிங்காநல்லூர் வெற்றி பெற வேண்டும். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து, 54 ஆயிரம் வாக்காளர்களை பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திக்க வேண்டும். தகுதி உள்ள வாக்காளர்களை சேர்க்க உதவ வேண்டும்.
தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்கவும் வேண்டும். நாளையே தேர்தல் வைத்தாலும் திமுக தான் வெற்றி பெறும். அந்த அளவுக்கு திமுக தேர்தல் பணியில் தயாராகி உள்ளது.” என்றார். இது கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.