Politics
நாகரிக அரசியல் செய்ய ஸ்டாலின் அல்ல.. எடுத்த எடுப்பிலேயே இறங்கி அடிக்கும் உதயநிதி.. நோட்டீஸ் பின்னணி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் நாகரீக அரசியல் செய்த காரணத்தால் தான் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதாக திமுகவினரிடையே மனக்குறையாக உள்ளது.
தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்ஸ்டா பிரச்சாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இவ்வளவு தூரம் பின்னடைவுக்கு காரணம் என்று திமுகவினர் நம்புகிறார்கள்.
இதனால் திமுக ஐடி விங்க் மற்றும் திமுக தலைமை தற்போது தங்களுக்கு எதிரான பிரச்சார வியூகங்களை முறியடிக்க புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே எடுத்த எடுப்பிலேயே உதயநிதி அடிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக தங்களுக்கு எதிராக காவிரி நீர் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஊடகங்களுக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணி 2017ம் ஆண்டு உருவானது.. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தல், 2020 உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், இடையில் நடந்த பல்வேறு இடைத்தேர்தல்கள் என பல தேர்தல்களில் திமுக அமோகமாக வென்றது.
2026 சட்டசபை தேர்தலிலும் திமுக வெல்லும் என்றே கணிப்புகள் இருந்தன. அதிமுக இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும், தவெக ஒரிரு இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் 10 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெறும் என்று கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால் கருத்துக்கணிப்புகளை எல்லாம் மீறி தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காங்கிரஸ் தேர்தல் முடிவு வெளியான மறுநாளே தவெக கூட்டணியில் இணைந்தது. அடுத்ததாக இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் என மொத்தமாக திமுக கூட்டணி உடைந்தது. அவர்களும் விஜய்க்கு ஆதரவு அளித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் செய்த நாகரீக அரசியலை சிறிதும் மதிக்காமல் கூட்டணிகள் வெளியேறிவிட்டதாக திமுகவினர் இன்றுவரை வருத்தப்படுகிறார்கள். அதேபோல் கடந்த 2025ம் ஆண்டு கரூர் சம்பவத்தில் ஸ்டாலின் நாகரீக அரசியலில் ஈடுபட்டு விஜய் மீது வழக்கு போடாமல் விட்டதாகவும், அதுதான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் என்றும் திமுகவினர் இன்று வரை வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதேபோல் திமுகவிற்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் விஜய் வெறுப்பை விதைத்துவிட்டதாகவும், அதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவிட்டதுடன், எதிரி யார் என்றே தெரியாமல் அதிமுகவிற்கு எதிராகவே பிரச்சாரம் செய்ததாகவும், இதுவே தோல்விக்கு காரணம் என்று திமுக தலைமையே நம்புகிறது.
தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவிற்கு கண்ணுக்கு கண் என்பது போல் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஸ்டாலின் போல் இல்லாமல் ஆக்ரோஷமாக கடுமையான மொழியில் பதில் அளித்து வருகிறார். அதேபோல் திமுகவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக வழக்குகளையும் போட உத்தரவிட்டுள்ளார். அதன்படியே திமுக தலைமையும் இன்ஸ்டாவில் திமுகவிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை செய்வோரை குறிவைத்து வழக்கு போட்டு வருகிறது.
அண்மையில் காவிரி தண்ணீர் தொடர்பாக தஞ்சை போராட்டத்தில் உதயநிதி பேசியது சர்ச்சையாக மாறியது. இதனை சர்ச்சையாக மாற்றியதில் தேசிய ஊடகவியலாளருக்கு பங்கு உள்ளதாக திமுக தலைமை நம்புகிறது. அதனால் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் திமுக தலைமை அனுப்பி உள்ளது. இந்தியா டுடே, என்டிடிவியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்னும் சிலருக்கு அனுப்ப ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இனி யாராவது திமுகவிற்கு எதிராக ஆதாரம் இல்லாம் வெறுப்பு பிரச்சாரம் செய்தால், அமைதியாக இருக்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் இறங்கி அடிப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள். அத்துடன் உதயநிதியின் இந்த அணுகுமுறையை திமுகவினர் வரவேற்கிறார்கள். அதேநேரம் தவெகவும் ஆட்சிக்கு வந்தது முதலே, யார் வெறுப்பு பிரச்சாரம் செய்தாலும், வழக்கு போடுவதுடன், கைதும் செய்கிறது. உதயநிதி ஸ்டாலினையே கைது செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உதயநிதி ஸ்டாலின் கைதான அன்றே விடுவிக்கப்பட்ட நிலையில், சட்டசபையில் கடந்த 3 நாட்களாக காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளது.