Government

தேசத்தந்தை மீதுள்ள வன்மம்.. 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜக – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் நாட்டில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) (VB G RAM G)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிவரும் 90% நிதியை 60%-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலங்களின் நிதிச் சுமை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ” மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜக அரசு

தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

Three Farm Laws, Caste Census போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VB G RAM G திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version