Government

37 நிமிடங்கள்.. 37 தவறுகள்.. ”ஈட்டி”யாக பாய்ந்த ஆளுநர் உரை.. பிரேமலதா

தமிழக சட்டசபையில் தமிழை ஆளுநர் அர்லேகர் சரியாக உச்சரிக்காதது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“ ஆளுநர் 37 நிமிடங்கள் பேசியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. ஆனா, 37 தவறுகள் தமிழைப் பற்றி உச்சரித்தவை… அத்தனையுமே மிக மிக ஒரு வேதனையான ஒரு விஷயமாக இங்க நான் பார்க்கிறேன்.

நம்முடைய தலைவர்கள் அறிஞர் அண்ணாவாகட்டும், கலைஞர் ஆகட்டும், ஐயா காமராஜர் ஆகட்டும் அனைத்துப் பெருந்தலைவர்கள் அதே போல வேலு நாச்சியார் இது போன்ற அவர் ஒவ்வொரு பெயரைச் சொல்லும் பொழுதும் முற்றிலுமாக அவருடைய உரையிலே அத்தனை பிழைகள் அன்றைக்கு இருந்தது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,

”ஆளுநர் உரை பற்றி சொல்கிற போது தமிழ் உச்சரிப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆளுநர் அரசின் சார்பில் இங்கே தன்னுடைய உரையை அவைக்குப் படிக்க வந்தபோது புதிதாகத் தமிழகத்திற்கு வந்திருக்கிற வேறு மாநிலத்தைச் சேர்ந்த நம்முடைய ஆளுநர் முதலில் எல்லா தலைவர்களுடைய பெயரையும் உச்சரிக்க முயன்றதையே நாம் முதலில் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் பேரவைத் தலைவர் அவர்களே ! அட்லீஸ்ட் தேன் வந்து பாய வேணாம், ஈட்டி வந்து பாய்ந்தது..இதை யாரும் மறுக்க முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version