Government

தமிழக ரயில்வே கிராசிங்குகளில் 236 பாலங்கள் கட்ட ரூ. 4,891 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து வந்தவாசியை இணைக்கும் வகையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் ரயில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அவர், இப்பகுதியில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்வதற்கான பொதுவான வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வேக்குச் சொந்தமான பகுதியில் விரிவான மதிப்பீட்டு அறிக்கைகைள் தயார் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கிராசிங்குகளில் உயர்மட்ட பாலம் மற்றும் கீழ்பகுதியில் தரைவழிப் பாலம் அமைப்பது ரயில்வேயின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். பாதுகாப்பான ரயில் சேவைகள், ரயில்களின் எண்ணிக்கை, சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் தாக்கம், நிதி வசதி போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு பாலங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

2004-2014-ம் ஆண்டு வரை 4,148 ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 2014- 2026 ஜனவரி வரை 14,026 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் 777 பாலங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே கிராசிங்குகளில் 4,802 எண்ணிக்கையிலான பாலங்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக 1,14,196 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழ்நாட்டில் 236 பாலங்கள் அமைப்பதற்கு 4,891 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version