Government

பேரவையில் கேள்வி கேட்ட போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு- வேல்முருகன் ‘டென்ஷன்’

சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.

சட்டப்பேரவையில் இன்று (பிப்.18) கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது: என் பண்ருட்டி தொகுதியில இருக்கிற நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அமைச்சரை கூட்டிட்டு போய் காட்டி, அங்க ஒரு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வேணும், ஒரு கட்டடம் வேணும்னு கேட்டேன். கட்டடத்தை தந்து இப்ப திறக்குற நிலைமையில இருக்கு. மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக்குறதுக்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கேட்டிருக்கிறதா சொன்னீங்க.

அதுவரைக்கும் அங்க பழமையான சர்க்கரை ஆலை இருக்கிறதுனால, தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படுறப்போ, விவசாயிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு போறப்போ, 24 மணி நேரமும் அங்க டாக்டர்களும், நர்ஸ்களும் பணியில இருக்கிறது இல்லை. அவங்களை பணியில வச்சிருக்க ஒரு அரசாணையை போடுற அதிகாரம் உங்களுக்கு இருக்கு. அதை செஞ்சு தர வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, வேல்முருகன்.. கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாதீங்க.. குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார். இதற்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுவா ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல ஒரு டாக்டர் தான் இருப்பாங்க. இரவு நேரங்கள்ல அவங்க ‘கால் ஆன் டூட்டி’ (Call on duty) முறையில தான் வருவாங்க. இருந்தாலும் நெய்வேலி தொழிலாளர்களோட முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இன்னும் ஒரு சில நாட்கள்ல 1,100 புதிய மருத்துவர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுருக்காங்க. எம்.ஆர்.பி (MRB) தேர்வு முடிஞ்சு இப்போ சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குது. பணி ஆணைகள் வழங்கப்பட்டதும், அந்த மருத்துவமனைக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தரப்படும் எனத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version