Politics
தன் தொகுதிக்குட்பட்ட செம்மொழி பூங்காவை இதுவரை பார்க்காத வானதி சீனிவாசன் எம்.எல்ஏ
கோவையில் தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்காவை தற்போது வரை பார்க்கவில்லை என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழியின் தனித்துவத்தையும் வரலாற்றுப் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்வைத்த திட்டமாகும். ஆட்சிமாற்றம் காரணமாக பூங்கா பணிகள் கிடப்பில் இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியது.
கோவையில் மத்திய சிறை வளாக பகுதியில் மொத்தம் 165 ஏக்கரில் பரந்து விரிந்த இந்த திட்டத்தில், தற்போது முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழிப்பூங்காவை திறந்து வைத்தார். டிசம்பர் 11முதல் பொதுமக்கள் பார்வைக்கு செம்மொழிப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்காவில் தமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளமாய், தமிழ் இலக்கியங்களில் முக்கிய அங்கமாக திகழும், கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியன், நள்ளி, ஓரி ஆகியோரின் கற்சிலைகள், தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள், இயல் இசை நாடகம், முத்தமிழ் மற்றும் இயற்கை, பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோவை சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து கோவை வரும் மக்கள் ஆர்வத்தோடு பூங்காவை பார்வையிட வருகின்றனர். இதனால் நாள்தோறும் சுமார் 10,000 பேர் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுமார் 30,000 பேர் வரை வருகை தருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செம்மொழிப்பூங்காவை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (ஜனவரி 3) வானதி சீனிவாசன் எம்எல்ஏ செம்மொழி பூங்காவிற்கு எதிரே உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செம்மொழிப்பூங்காவை பார்த்தீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் பார்க்கவில்லை. பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்று சொன்னதால் பணிகள் நிறைவடைந்த பின் பார்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் செம்மாழி பூங்காவை பார்வையிட வரும் நிலையில் வானதி சீனிவாசன் தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காவை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.