Connect with us

Politics

பாமகவில் இருந்து விலக தயார் – மனம் திறந்த ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்தால் நான் பாமகவில் இருந்து விலக தயார். எனக்கு பாமகவில் பதவிகள் வேண்டாம். எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (டிசம்பர் 15) ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இன்றைக்கு பாமக வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ராமதாஸ்தான். ராமதாஸ் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனை யாரால் வந்தது என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் மருத்துவர் ராமதாஸ்.

கண்ணீர் வடிக்கும் ராமதாஸ்

இதுவரை ராமதாஸ், பாளையங்கோட்டை சிறைக்கு தான் செல்லவில்லை மற்ற எல்லா சிறைக்கும் சென்றுவிட்டார். அதேசமயம் பாமகவிற்கு சோதனை என்றால் ராமதாஸ் எப்படி தாங்கி கொள்வார்.

இப்போது என் அப்பா மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அன்புமணி கூறி உள்ளார். அவருடன் இருப்பவர்கள் அவரை கெடுக்கின்றனர் என அன்புமணி கூறுவது மிகவும் அநாகரிகம். அன்புமணியின் செயல்பாடுகளால் தான் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார்.

என் தந்தையுடன் இருப்பவர்கள் அவரின் மனதை மாற்றி துரோகம் செய்கிறார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். ஜி.கே. மணிதான் என்னையும் என் தந்தையையும் பிரித்தார் என்று அன்புமணி தெரிவித்திருப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

ராஜா வீட்டு கன்னுக்குட்டி

நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்ததில்லை. அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுங்கள் என்று நான்தான் ராமதாஸிடம் பேசினேன். அதற்கு ராமதாஸ் என் மீது மிகவும் கோபப்பட்டார். ஆனால் ராமதாஸிடம் தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்தேன்

அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை, என் அப்பாவுக்கு அடுத்த நிலையில், உங்களைதான் நினைக்கிறேன் என்றார். இப்போது அப்பாவையும் மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். உங்கள் மகன் அன்புமணியை பார்க்காதீர்கள் என்று நான் சொல்ல முடியுமா? அப்படி நான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா? ராமதாஸிடம் இருந்து அன்புமணி கட்சியை பிரித்து எடுத்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

எங்களை பொறுத்தவரை ராமதாஸை ராஜாவாக பார்க்கிறோம். அன்புமணியை ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கிறோம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி, எட்டி உதைக்கும், சீறீப்பாயும் என நாங்கள் பொறுமையாகத்தான் இருக்கிறோம்.

பாமகவின் எதிர்காலமே முக்கியம்

ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்து பேசினால்தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். பாமக தேர்தலில் பலமான கட்சியாக இருக்க வேண்டுமென்றால் இருவரும் இணைய வேண்டும்.

துரோகிகள் இருக்கும் வரை ராமதாஸுடன் இணைய மாட்டேன் என்று அன்புமணி கூறினால், யாரெல்லாம் துரோகிகள் எனக் கூறுங்கள். நாங்கள் வெளியேறி விடுகிறோம். ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேருவதற்கு நானும் எனது குடும்பத்தினரும் வெளியேறத் தயார். எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்யத் தயார். வேறு கட்சியில் சேர மாட்டேன். எனக்கு பாமகவின் எதிர்காலமே முக்கியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General17 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General17 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics19 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics19 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics21 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.