Connect with us

Politics

திமுகவில் சீட்டுக்கு போட்டா போட்டி.. ரேஸில் முந்தும் இளைஞரணியினர்.. முட்டி மோதும் சீனியர்கள்!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளுங்கட்சியில் சீட் பெற பலரும் முட்டி மோதி வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இளைஞரணி கோட்டாவில் இந்த முறை அதிக சீட் ஒதுக்கப்படும் என்கிறது அறிவாலய வட்டாரம். சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு இந்த முறை கல்தா கொடுக்கப்பட்டு உதயநிதியின் ஆதரவு பெற்ற புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறதாம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்தச் சூழலில் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்கிற விவாதம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறும் வேலைகளில் தீவிரமாகி உள்ளன. இது ஒருபுறமிருக்க ஆளும் கட்சியான திமுகவில் வேட்புமனுக்கு தாக்கலுக்கு முன்பாகவே ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் யார் என்ற போட்டி அனல் பறந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சீட் பெறுவதில் இளைஞரணி நிர்வாகிகளுக்கும் அங்கிருக்கும் சீனியர்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக சி.வி.எம்.பி எழிலரசன் பதவி வகித்து வருகிறார். தொடர்ச்சியாக இரண்டு முறை காஞ்சிபுரம் எம்.எல்.ஏவாக இருக்கும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எழிலரசனுக்குத் தான் இந்த முறையும் சீட் கிடைக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், அதே தொகுதியைச் சேர்ந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், காஞ்சிபுரம் மேயரின் கணவருமான யுவராஜ் துணை முதல்வர் வழியாக கடும் முயற்சி செய்கிறார்.

தாம்பரம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா. மூன்று முறை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதியின் உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக அவர் மீது அதிருப்தி அலைகள் ஓயாது அடிக்கிறது. இந்தச் சூழலில் முதல்வர் குடும்பத்தின் ஆதரவு பெற்றவரும், பலரின் குட் புக்கில் இடம்பிடித்திருக்கும் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகர் தாம்பரம் சீட் கேட்டுக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறாராம்.

செங்கல்பட்டு எம்.எல்.ஏ-வாக வரலட்சுமி மதுசூதனன் கடந்த பத்து வருடங்களாக இருந்துவரும் நிலையில், இந்த முறை இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் செங்கல்பட்டு தொகுதியைக் குறிவைத்து தேர்தல் பணிகளை ஆரம்பித்திருக்கிறார். இளைஞரணி செயல்பாடுகளில் அவர் காட்டி வரும் வேகம் செங்கல்பட்டு தொகுதியை அவருக்குப் பெற்றுத் தரும் என்கிறார்கள் அன்பக உடன்பிறப்புகள்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமில்லாது தலைநகர் சென்னையிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. உதயநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், வேளச்சேரி தொகுதியை பெரும் முயற்சியில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகவே அந்த தொகுதியில் வந்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் எபினேசர் சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். எனினும் தொகுதியில் அவரது செயல்பாடுகளில் தலைமை குறிப்பாகத் துணை முதல்வர் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த தொகுதியைக் குறிவைத்து செய்தி தொடர்பு இணை செயலாளர் சையது ஹபீஸ் முயன்று வருகிறார்.

பெரம்பூர் தொகுதியைச் சுற்றி திமுகவில் பல உள்ளடி அரசியல் நடந்து வந்தாலும் அந்த தொகுதி எம்.எல்.எ ஆர்.டி.சேகர், உதயநிதியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் மீண்டும் அவரே பெரம்பூர் தொகுதியில் தொடரவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

இதேபோல ராயபுரம் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ ஐடிரீம்ஸ் மூர்த்தி மீது தலைமை ஏகத்துக்கும் கடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கேப்பில் சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் பழ.செல்வகுமார் ராயபுரம் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கி இருக்கிறாராம்.

தலைநகரை ஒட்டிய பகுதிகளில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே இளைஞரணி நிர்வாகிகள் சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து இப்போதிருந்தே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் ஏற்கனவே அந்த தொகுதியில் இருக்கும் சீனியர்கள் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முட்டி மோதும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கிறது. முடிவில் யாருக்குச் சீட் என்பதைத் தலைமை தான் முடிவு செய்யும்.

அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். திமுக இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்துவிட்டு இளைஞர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என மேடையிலேயே திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். ஆக, இந்த முறை உதயநிதி கோட்டாவில் இளைஞர் அணியினர் பலருக்கு சீட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

General18 hours ago

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

General18 hours ago

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.

Politics20 hours ago

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …!

Politics20 hours ago

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Politics23 hours ago

சென்னை சோழிங்கநல்லூர் 198 வட்டக் கழகத்தின் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Copyright © 2025 NowTamil.