General
விஜய்யின் சொத்து விபரங்களை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சொத்து விபரங்களை ஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், சுமார் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், தனது மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருப்பது குறித்து வேட்புமனுவில் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இதுகுறித்த ஆய்வு செய்யக்கோரி, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. அதில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது, தேர்தல் நடைமுறையில் மோசடி செய்வதற்குச் சமம் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.