General
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு
சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை வெளிப்படையாக எழுதி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணங்கள் குறித்த முழு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். ஆனால் உரிய விவரங்கள் அளிக்கப்படவில்லை.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதல் யாரும் உரிய முறையில் அவருக்கு விளக்கம் அளிக்கவில்லை. தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்படியே இரண்டரை ஆண்டு காலம் கடந்தது.
இதனால் லியாகத் அலி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். ஆணையத்தின் ஆணையர் விபிஆர் இளம்பரிதி விசாரித்து உடனடியாக உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் விபிஆர் இளம்பரிதி பிறப்பித்துள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் உள்ள தனியார், சிபிஎஸ்இ, அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் நுழைவு வாயில்கள், இணையதளங்கள் மற்றும் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் வகுப்பு வாரியான கட்டண கட்டமைப்பை கட்டாயம் வெளியிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இது மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு குட்நியூஸாகும்.
அதுமட்டுமின்றி மனுதாரர் கேட்ட விவரங்களை உடனடியாக வழங்காததை ஆணையர் கண்டித்ததோடு, மனுதாரர் லியாகத் அலிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க பள்ளி கல்வித்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி உரிய விவரங்களை கொடுக்க மறுத்து மனுதாரரை அலைக்கழித்தது பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார். லியாகத் அலி கடந்த மூன்றரை ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக முறையான தகவல்களை பெற போராடி வந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.