Politics
உச்சி முதல் பாதம் வரை.. ராகுல் காந்திக்கு பயத்தை கொடுத்த திமுக.. ஸ்டாலினின் பயங்கர மூவ்?
இந்திய அரசியலில் அடுத்த பெரும் புயலைக் கிளப்பக் கூடிய விவகாரமாக ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடர்களில் நீட் தேர்வு சார்ந்த எதிர்ப்புகள் மற்றும் பிற அரசியல் சூழல்கள் காரணமாக இந்த மசோதாவைத் மீண்டும் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை புதிய மாற்றங்களுடன் மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு தீவிர திட்டமிடலில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள், மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
இருப்பினும், தற்போதைய புதிய யோசனையின்படி, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தற்போதைய எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் உயர்வு அளிக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 50% தொகுதி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543-லிருந்து 816 ஆக உயரும். இதன் மூலம், தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக கணிசமாக அதிகரிக்கும். தென் மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசும் உறுதியளித்துள்ளது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பலத்தையும், மாநிலத்தின் பிரதிநிதித்துவ உரிமையையும் கருத்தில் கொண்டு, 50% தொகுதி உயர்வு என்ற நிபந்தனையுடன் கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தேசிய அளவில் காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு பல விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கும் நிலையில், மாநிலத்தின் நலனை முதன்மையாக வைத்து முடிவெடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் இந்த வியூக மாற்றம், காங்கிரஸ் தலைமையையும் ராகுல் காந்தியையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வட மாநிலங்களில் அதிக மக்கள்தொகை இருப்பதால், எதிர்காலத்தில் வட மாநிலங்களின் தொகுதிகள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அது பாஜகவிற்கு பெரும் சாதகமாக அமையும் என்றும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மிகக் கடினமாக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் தான் தொகுதி மறுவரையறை முயற்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.
திமுக ஒருவேளை மத்திய அரசின் இந்த திருத்தப்பட்ட மசோதாவிற்கு ஆதரவளித்தால், காங்கிரசின் அழிவிற்கு காரணமாகும் என்று ராகுல் அஞ்சுகிறாராம். தென் மாநிலத்தில் இருந்த வலுவான தோழமைக் கட்சியான திமுகவை பகைத்தது தவறு என்று ராகுல் நினைக்கிறாராம். நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிரான தங்களின் போராட்டம் பலவீனமடைந்துவிடும் என்று ராகுல் காந்தி அச்சப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களும், கூட்டணி கணக்குகளில் புதிய திருப்பங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.