Connect with us

Government

ராகுலின் ஜோடோ யாத்திரையால் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்? டேட்டாவுடன் வந்த திமுக

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் திமுக- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்த், ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையால்தான் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றதற்கு காரணம் என தெரிவித்திருந்த நிலையில் ராகுல் யாத்திரையால் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது என்பது குறித்து திமுக ஐடி விங் டேட்டாவுடன் பதிவிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் திமுக கூட்டணியால் காங்கிரஸுக்கு பலமா, இல்லை காங்கிரஸுடன் இணைந்ததால் திமுக பலனடைந்ததா என்பது குறித்த விவாதம் எழுந்தது.

அதில் திமுக எம்எல்ஏ கோவி செழியன், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேச்சை சுட்டிக் காட்டி மேலூர் பொதுத் தொகுதியில் திமுக தொண்டர்கள் உங்களை வெற்றி பெற வைத்தனர். கருப்பு சிவப்பு கரை வேட்டி கட்டிய திமுக தொண்டர்களின் வாக்குகள் மூலமே விஸ்வநாதன் வென்றார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஆதவ் அர்ஜுனா, தவெக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வென்றது. 23 கட்சிகள் அடங்கிய கூட்டணி இல்லை என்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. சென்னையில் 2 தொகுதிகளில் கூட வென்றிருக்காது.

திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதற்கு கூட்டணியே காரணம். தைரியம் இருந்தால் அடுத்த தேர்தலில் தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என்றார்.

கோவி செழியன் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு, நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டு வந்த இயக்கம்தான் திமுக என்றார்.

அப்போது கே.என்.நேரு பேசுகையில், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் இன்று தவெக ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள் என்றார்.

உடனே கோபத்துடன் குறுக்கிட்ட தாரகை கத்பர்த், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தியதால்தான் திமுகவுக்கு இத்தனை எம்பிக்கள் கிடைத்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கூட்டணி காரணமாகவே திமுகவுக்கு எம்பிக்களும் எம்எல்ஏக்களும் கிடைத்தனர். 22 ஆண்டுகள் திமுகவுடன் காங்கிரஸ் பயணித்ததால் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்தோம். இப்போது எங்களுக்கான ஆட்சி வரும் போது தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார்.

ஆவேசமாக எழுந்த கே.என். நேரு குறுக்கிட்டு பேசுகையில், இந்தியா முழுவதும் யாத்திரை சென்ற போதிலும் தமிழகத்தில் மட்டும்தான் 40-க்கு 10 இடங்களைக் கொடுத்துள்ளோம். ராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக என்றார்.

தாரகை கத்பர்த் கூறியது போல் ராகுல் நடத்திய ஜோடோ யாத்திரையால் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றது என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து திமுக ஐடி விங்கை சேர்ந்த மதுரை எஸ். பாலா என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி 21 நாட்கள் யாத்திரை மேற்கொண்டார். 28 இடங்களில் பாஜக 19 இடங்களை பெற்றது.

ஆந்திராவில் காங்கிரஸ் ஒரு தொகுதிகளில் கூட வெல்லவில்லை. தெலுங்காவில் 12 நாட்கள் யாத்திரை சென்ற நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து வெறும் 8 இடங்களை பெற்றது. ராஜஸ்தானில் 18 நாட்கள் யாத்திரை சென்றதில் 25 இடங்களில் 14 இடங்களை எதிர்க்கட்சி பெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளில் வென்றது. அது போல் ஜம்மு காஷ்மீரில் 11 நாட்கள் ராகுல் நடையாய் நடந்து ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை.

ஆக ராகுல் காந்தி இந்தியா முழுக்க 136 நாட்கள் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் மட்டுமே வென்றது. அப்படியென்றால் ஒரு நாள் நடந்ததற்கு ஒரு இடம் கூட அவரால் வெல்ல முடியவில்லை என்பதுதான் அர்த்தம். ராகுல் காந்திக்கு வாக்குகளை பெறும் திறன் இல்லை, ஏனென்றால் அவரை மக்கள் நம்பவில்லை. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றதற்கு காரணம் எங்கள் தலைவர் ஸ்டாலின்தான்! என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.