Connect with us

Sports

இந்திய அணியின் திட்டத்தை உடைத்த சோனல் தினுஷா.. ஃபாலோ ஆன் சிக்கலை தாண்ட இன்னும் எத்தனை ரன் தேவை?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ‘பாலோ ஆன்’ கொடுக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இலங்கை ஆல்-ரவுண்டர் சோனல் தினுஷா அபாரமாகப் போராடி வருகிறார்.

கொழும்பில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த அந்த அணிக்கு பசிந்து சூரியபண்டாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி ஓரளவு கைகொடுத்தது. சூரியபண்டாரா 133 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், மெண்டிஸ் 32 ரன்களும் எடுத்தனர். சூரியபண்டாராவை ஜடேஜா போல்டாக்கி வெளியேற்றினார். எனினும், ஒரு கட்டத்தில் 173 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 503 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், இலங்கை அணியை 304 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கினால் ஃபாலோ ஆன் கொடுக்கலாம் என்ற நிலை இருந்தது. அப்போது களம் இறங்கிய சோனல் தினுஷா, இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியை மீட்டார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சோனல் தினுஷா ஆட்டமிழக்காமல் 137 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்துத் தற்போதும் களத்தில் உள்ளார்.

இவருக்குத் துணையாக லஹிரு குமாரா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் 8 வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணியை விரைவில் சுருட்டி ஃபாலோ ஆன் வழங்க வேண்டும் என்ற இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் திட்டத்தை உடைக்கும் வகையில் தினுஷாவின் ஆட்டம் அமைந்தது.

இந்திய அணி பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், மானவ் சுதர் 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அறிமுக வீரரான சரண்ஷ் ஜெயின் 18 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும் ரன்களைக் கட்டுப்படுத்தினார். விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் சிறப்பாகச் செயல்பட்டார்.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. நான்காவது நாள் காலையில் மேலும் 39 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி ஃபாலோ ஆன் வழங்க இந்திய அணி திட்டமிடும். இந்திய அணியை விட இலங்கை அணி தற்போது 238 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 NowTamil.